போர்க்குற்றம் விசாரணையை மறுத்தால் உள்நாட்டு போர் உருவாகும்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்:
 
.நா மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கவில்லையெனில், போர்க்குற்றம் விசாரணையை மறுத்தால் இலங்கையில் மீண்டும் மோதல்கள் உருவாகும் ஆபத்து உள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் உதவிச் செயலர் ராபர்ட் ஓ பிளேக், வாஷிங்டனில்  செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் மிக முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் மீண்டும் வன்முறைகள் அதிகரிக்கலாம்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் பல்வேறு கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள். உலகில் நிகழ்ந்த பல உள்நாட்டு மோதல்கள் இதைத் தெரிவிக்கின்றன. இலங்கையிலும் இதேபோன்ற நிலைமை ஏற்படக்கூடும்” என ராபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.

மேலும், “போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசு பல அடிப்படைக் கட்டுமான வசதிகளை வடக்கில் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வடக்கில் உள்ள தமிழர்கள் தாங்கள் தொடர்ந்து ராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாக உணர்கிறார்கள். இந்த நிலையில், தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்ய வேண்டும்” என ராபர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை