பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்: கம்யூ.கட்சிகள் முடிவு


டெல்லி:


``விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.  

இது குறித்து அவர் மேலும் கூறியது, `` விலைவாசி உயர்வு குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தவும், ஒத்துவைப்புத் தீர்மானம் கொண்டுவரவும் அனுமதியில்லை என்ற  சபாநாயகர் அறிவிப்பை நாங்கள் ஏற்க முடியாது. மக்களவைத் தலைவரின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசு தனது இயலாமையையும் தோல்வியையும் ஒப்புக்கொண்டு அதை சரி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அவையில் பல முக்கியப் பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டியிருப்பதால் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றார் அவர்.  நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே அவைக்கு வெளியே நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் வாசுதேவ் ஆச்சாரியாவும் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் பங்கேற்கும்" என்று டி.ராஜா தெரிவித்தார்.
இந்தியா