காமராஜருக்கு கவுரவம் செய்தது யார்?: ஜெ.க்கு கருணாநிதி பதில்

சென்னை:


``காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு கவுரவம் செய்து வருவது தி.மு.க அரசில் தான்`` என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

``திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது அ.தி.மு.க. வின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி`` என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``காமராஜர் பெயரை வைக்கக் கூடாது என்று கருதுகின்ற அரசா இது? கக்கன் சிலையை வைக்கத் தயங்குகின்ற ஆட்சியா இது? காமராஜர் பிறந்த நாளை தியாகிகள் தினமாகவும், கல்வி வளர்ச்சி நாளாகவும் அறிவித்து சட்டம் நிறைவேற்றிக் கொண்டாடுகின்ற அரசல்லவா இது?

காமராஜர் மறைந்த போது அவரது உடலை அரசு மரியாதைக்காக ராஜாஜி ஹாலில் வைக்க வேண்டுமென்று சொன்னவனே நான்தானே? கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை என்று இவர்கள் எல்லாம் கோரிக்கை வைத்த பிறகு, உண்ணாவிரதம் இருந்த பிறகா நான் பெயர் சூட்டினேன்?

மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும், காமராஜரின் பெயரையும் வைக்க வேண்டுமென்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் நான் கோரிக்கை வைத்து நிறைவேற்றினேன். அப்போது ஜெயலலிதாவும், அவருடைய கட்சியினரும் எங்கே போனார்கள்?

கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டுமென்று கோரிக்கை வந்த போது, மத்திய அரசு அதனை ஏற்க மறுத்தது.  ஆனால், மத்திய அரசிடம் வாதாடி விதிவிலக்குப் பெற்று காமராஜர் மணிமண்டபத்தை எழுப்பக் காரணமாக இருந்தவன் நான்.  சென்னை மாநகராட்சிப் பொறுப்பில் திமுக இருந்த போது, பெரியார் பாலத்துக்கு அருகே காமராஜருக்கு சிலை அமைத்து, அன்றைய பிரதமர் நேருவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது.

தியாகி கக்கன் முழு உருவ வெண்கலச் சிலை மதுரையில் கடந்த 1997-ம் ஆண்டு என்னால் திறக்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள தும்பப்பட்டியில் தியாகி கக்கனுக்கு ரூ.25 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டி முடித்து அதையும் நான் திறந்து வைத்தேன்.

சென்னை மாம்பலம் சி.ஐ.டி. நகரில் தியாகி கக்கனுக்கு அரசுக் குடியிருப்பை ஒதுக்கீடு செய்தது திமுக அரசு. மேலும், கக்கனின் வாரிசுகளுக்கு மாதச் செலவுக்கான நிதி உதவியையும் செய்தது திமுக ஆட்சியில் தான். கக்கனுக்கு நினைவு தபால் தலையும் வெளியிடப்பட்டது. இதையெல்லாம் ஜெயலலிதா மறைத்து விட்டார்" என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு