மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய இந்திய அதிகாரி: தமிழக முதல்வருக்கு பிரதமர் கடிதம்




சென்னை:
 
 
``இலங்கையில் இந்தியா வழங்கிய ரூ. 1000 கோடி நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர் மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இலங்கை அனுப்பப்படுவார்" என்று பிரதமர் மன்மோகன் சிங்,  தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
``இலங்கையில் நடைபெற்று வரும் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் திருப்தியாக இல்லை.
இந்தியா வழங்கிய நிதி இலங்கை அரசு பயன்படுத்துகிறதா என்று ஆய்வு செய்ய சிறப்புத் தூதர் ஒருவரை இந்தியா அனுப்ப வேண்டும்" என்று முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.   
 
இதற்கு பதில் அளித்து பிரமதர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில், ``இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவது குறித்து தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு, பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்திவருகிறது.    இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்துகொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுகிறார். 
 
அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்.   மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார்" என்று தனது கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை