தில்லாலங்கடி
நடிகர்கள்: ஜெயம் ரவி, தமன்னா, ஷாம், வடிவேலு, பிரபு, சுஹாசினி, லிவிங்ஸ்டன், சந்தானம்.

இசை    : யுவன்சங்கர் ராஜா

பின்னணி இசை: எஸ். தமன்

ஒளிப்பதிவு    : பி. ராஜசேகர்.

பாடல்கள்     : நா. முத்துகுமார், விவேகா

இயக்கம்      : ஜெயம் ராஜா

தயாரிப்பு      : எடிட்டர் மோகன்.

வெளியீடு     : சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.

தெலுங்கில் வந்த “கிக்” ரீமேக்தான் இந்த தில்லாலங்கடி! தன்னுடைய ரீமேக் பாலிசியைக் கைவிடாமல் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார் ஜெயம் ராஜா.

தன் போக்கில் போகும் பையனைப் (ஜெயம் ரவி) புரிந்துகொண்டு அவன் போக்கில் விடும் அப்பா (பிரபு), அம்மா (சுஹாசினி). ஹீரோ இதில் ஒரு கொள்கை வைத்துகொண்டு அதனோடு பயணிக்கிறார். அது என்ன கொள்கை?


‘கிக்’குக்காக எதையும் செய்யும் கிருஷ்ணா (ஜெயம் ரவி) ஒரு வேலையில் நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கமாட்டார். அதே கிக்குக்காக தன் நண்பன் திருட்டுக் கல்யாணம் செய்துகொள்ளப்போவதை நண்பனின் மாமியாரிடத்தில் (எம்.எல்.ஏ.வாக வரும் நளினி) போட்டுக்கொடுத்துவிட்டு அவரிடத்திலிருந்து ஜோடியைக் காப்பாற்றிக் கல்யாணமும் செய்து வைக்கிறார். இந்த களோபரக் கல்யாணத்தில் அறிமுகமாகும் நிஷாவைக் (தமன்னா) கண்டதும் காதலித்து அதைச் சொல்லியும் விடுகிறார். ஆனால் தன்னை உடனே காதலிக்கவும் கூடாது என்கிறார். ஹீரோ காதலைச் சொன்னவுடன் ஹீரோயின் உடனே ஓகே சொன்னா கிக் போய்விடுமே...அதான் அப்படி! காதலிப்பதற்குக் காரணமாய் இருந்த கிக் கேரக்டர் வாழ்க்கைக்கு சரிப்பட்டுவராது என்று கிருஷ்ணாவை விட்டுப் பிரிந்து மலேஷியா சென்றுவிடுகிறாள் நிஷா.

மலேசியாவில் நிஷாவைப் பெண் பார்க்க வருகிறார் திறமையான போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமார் (ஷாம்). போலீஸ் இருந்தால் திருடன் வரணுமே. வருகிறான். வேற யாரு நம்ம ஹீரோதான். வாழ்க்கையில கிக்கு வேணும் என்று சுற்றிக்கொண்டிருந்த கிருஷ்ணா ஏன் திருடனானான்? போலீஸிடம் அவன் மாட்டினானா? பிரிந்த காதலியைக் கரம் பிடித்தானா? என்பதுதான் மீதிக் கதை.

முதல் பாதி முழுவதும் கலகலப்பாக நகரும் படம். இரண்டாம் பாதியில் ஏதோ ந..க..ர்..கி..ற...து. நண்பன் சத்யனின் காதல் திருமணத்தை ரவி நடத்தி வைக்கும்போது கிடைக்கும் கிக் அதன் பின் அவரே பெரிய பெரிய தொகையாகத் திருடும்போதும் திருடன் - போலீஸ் வேட்டையிலும் கிடைக்கவில்லை.

ரவி சுறுசுறுப்பாக இருக்கிறார். சண்டையில் அதிரடி, காதல் குறும்பில் உற்சாகம், காமெடியில் டைமிங் என்று நன்றாகவே செய்கிறார். ஆனால் சவாலான வேடம் இல்லாததால் அவர் கேரக்டர் மனதில் நிற்கவில்லை.

மிடுக்கான போலீஸாக வரும் ஷாம் அளவான பேச்சு, அலட்சியமான பார்வையால் தடம் பதிக்கிறார். தமன்னாவின் காதலைப் புரிந்துகொள்ளும் போதும், ரவியின் கேரக்டரைப் புரிந்துகொள்ளும் போதும் மனதில் இடம்பிடிக்கிறார்.

அழகான லூசுப் பெண் வேடத்தில் தமன்னாவால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார். ரவியை விட்டுப் பிரியும் இடத்தில் மட்டும் கொஞ்சம் நடிப்பு எட்டிப் பார்க்கிறது. அழகான பெண்ணை லூசாகக் காட்டினால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று பெரும்பாலான இயக்குனர்கள் நினைப்பதுபோல ராஜாவும் நினைத்துவிட்டார்போல. ஹீரோயின் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரும் ராஜா இந்தப் படத்தில் தடம் மாறியிருக்கிறார்.

அப்புறம் வடிவேலு வருகிறார் வழக்கம்போல சிரிக்கவைக்கிறார். திடீரென்று காணாமல் போய்விடுகிறார். ராதாரவிக்கு இதில் காமடி கேரக்டர். கூடவே, மனோபாலா, கஞ்சா கருப்பு, சந்தானம் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.


டைட்டிலில் பிரபுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். நிச்சயம் நன்றி பாராட்டப்பட வேண்டிய நபர்தான் அவர். இப்படி ஒரு டம்மி ரோலில் நடிக்க சம்மதித்ததற்கு.

படத்தின் வசனங்களில் காமெடி வாசனை தூக்கல். அழுத்தம் மிஸ்ஸிங். "உயிரைக் காப்பாத்தப் பணம் கேட்டால் ஓட்டுப் போட பணம் கொடுப்பதுபோல இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கறீங்களே" என்ற வசனத்தின்போது தியேட்டரில் கைதட்டல்.  

பிண்ணனி இசை அமைத்திருக்கும் எஸ். தமன் தன் பங்கைச் செவ்வனே செய்திருக்கிறார். பாடல்கள் யுவன் சங்கர் ராஜா. இரண்டு பாடல்கள் தவிர மற்றவை ஒட்டவில்லை. படத்தோடும் மனதோடும்.

ஒளிப்பதிவாளர் பி. ராஜசேகர் ரவி, தமன்னா கூறும் ஃபிளாஷ்பேக் காட்சிகளையும், ஷாம் ரவியைப் பற்றிக் கூறும் காட்சிகளையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். இவரின் ஒளிப்பதிவில் மலேசியா பல வண்ணத்தில் ஜொலிக்கிறது. முதல் பாதியில் ஜாலியான மூடை ஏற்படுத்தியிருப்பதற்கு ஒளிப்பதிவும் ஒரு காரணம்.  

லாஜிக் ஓட்டை உடைசல் எல்லாம் இருந்தாலும் இரண்டாம் பாதி நீ...ளமாய் இருந்தாலும், பொழுதுபோக்குக்கு ஓரளவு உத்தரவாதம் உண்டு.

*

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்

praveen
this is a good article