பணத்தை உண்டியலில் முடக்காதீர்கள்

எங்கள் கல்லூரியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய நண்பரைப் பற்றி பெருமையாகச் சொன்னார். `காசு பணம் சேர்ப்பதில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. வீட்டிலே எல்லாத்துக்கும் உண்டியல் வெச்சிருக்கார் தெரியுமா?` என்றார். எனக்குப் புரியவில்லை. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.

வண்டிக்கு மாசம் ஐநூறு ரூபாய் மெயிண்டெனன்ஸ் ஆகும். அதுக்கு சம்பளத்தில் இருந்து காசு எடுக்க மாட்டார். ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய்னு கணக்குப் போட்டு தனியாக ஓர் உண்டியல் வெச்சு அதிலே போட்டுகிட்டே வருவார்.

மாசம் முடியும்போது எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடியிருக்கோ அத்தனை ரூபாய் சேர்ந்திருக்கும். தனியாக பணம் சேர்க்க வேண்டியதில்லை பார்த்தீங்களா? இதேபோல ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உண்டியல் வெச்சிருக்கார்`  என்றார்.

எங்கள் ஊழியரின் நண்பர் பாதி சரி... பாதி தப்பு!

வரவுக்கு மேலே செலவழிக்கும் இந்தக் காலத்தில் ஏதோ சேமிக்க வேண்டும் என்ற நினைப்பாவது அவருக்கு இருக்கிறதே அந்த வகையில் அந்த நண்பர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். ஆனால், கண்ணாம்மா காலத்தைப் போல உண்டியலில் சேமிக்கிறாரே. அது தவறு.

இன்றைக்கு நாடு இருக்கும் நிலைமையில் ஒற்றை வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாது. இன்னொரு வருமானம் வேண்டும். அது வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர் வேலைக்குப் போய் சம்பாதிப்பது என்று இல்லை, உங்கள் பணம்கூட உங்களுக்காக உழைக்க வேண்டும், வருமானம் சம்பாதித்துத் தரவேண்டும்.

கேட்டதையெல்லாம் கொண்டுவந்து கொடுக்கும் அலாவுதீன் பூதத்தைக் கொண்டுபோய் விளக்குக்குள் அடைத்து வைத்ததுபோல பணத்தைக் கொண்டுபோய் உண்டியலுக்குள் முடக்கி வைக்காதீர்கள். அதை உழைக்க அனுப்புங்கள்.

அப்படி அனுப்பும் முன்னால் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போதே இந்தப் பள்ளிக்கூடம் எப்படிப்பட்டது, நன்கு கற்றுக் கொடுப்பார்களா, ஆசிரியர்கள் நல்லவர்களா என்றெல்லாம் தெரிந்துகொண்டுதானே சேர்ப்போம். அதுபோல, உங்கள் பணத்தைப் போடும் முன் அந்த இடம் எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பணம் பெருக வேண்டும் என்பதுதான் அடிப்படையான விஷயம், அதுதான் உங்களுடைய ஆசையாகவும் இருக்கும். ஆனால், நூறு ரூபாய் போட்டால் இருநூறு ரூபாய் வரவேண்டும் என்று நினைக்கக் கூடாது. அது ஆசை இல்லை, பேராசை! அப்படி பேராசைப்பட்டதன் விளைவுதான் சில ஆண்டுகளுக்கு முன்னால் காளான்களாக முளைத்த ஃபைனான்ஸ் கம்பெனிகளின் ஓட்டமும் அதில் பணத்தைப் போட்டுவிட்டு மூலதனத்தையே இழந்த ஆசாமிகளின் கண்ணீரும்!

நியாயமாக சம்பாதிப்பதற்கும் பணத்தைப் பெருக்குவதற்கும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் இந்த வழிதான் சிறந்தது, அந்த வழிதான் லாபகரமானது என்று எதுவும் இல்லை. எல்லா வழிமுறைகளுமே சிறப்பானவைதான். எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உங்களுடைய வயதும் சூழ்நிலையும்தான்.

உங்கள் வயது இதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. நீங்கள் ரிட்டயர்ட் ஆசாமியாக இருந்து கொண்டு ஒரே வருடத்தில் லட்ச ரூபாயைப் போட்டு பலமடங்கு லாபம் சம்பாதிக்க ஆசைப்படக் கூடாது. ஏனென்றால், அதிக வருமானத்துக்கான முயற்சியின்போது போட்ட மூலதனமே காணாமல் போக வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் போனாலும் தாக்குப் பிடிக்கக் கூடிய நிலையில் இருந்தால்தான் நல்லது. வாழ்க்கைக்கு ஆதாரமான தொகையைக் கொண்டுபோய் போட்டுவிட்டு, வாழ்க்கையை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.

எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்கலாம் என்பதற்கு சின்னதாக ஒரு கணக்கு இருக்கிறது. நூறு என்ற எண்ணில் இருந்து உங்கள் வயதைக் கழித்தால் என்ன எண் கிடைக்குமோ அத்தனை சதவிகிதம் நீங்கள் ரிஸ்க் அதிகமான வழிகளில் பணம் ஈட்ட ஆசைப்பட்டு முதலீடு செய்யலாம். இன்னொரு விதமாகச் சொல்வதாக இருந்தால் உங்கள் வயதின் சதவிகித முதலீடு பாதுகாப்பான இடத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் வயது ஏறஏற பாதுகாப்பான முதலீட்டின் அளவும் அதிகமாகிக் கொண்டே போகும். அப்போதுதான், கடைசிக் காலத்தில் உங்களால் நிம்மதியாக இருக்கமுடியும்.

அடுத்து மிக முக்கியமான விஷயம், நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பது? உங்கள் கையில் எவ்வளவு ரூபாய் இருக்கிறது. அதற்கு என்னவெல்லாம் செலவு இருக்கிறது. பெற்றோரின் பாதுகாப்பு, உடன்பிறந்தோரின் திருமணம், குழந்தைகளின் கல்வி, உங்களின் ஓய்வுக்காலம் என்று அந்தப் பணத்துக்கு என்னவெல்லாம் வேலை இருக்கிறது என்பதையெல்லாம் பொறுத்துதான் நீங்கள் பாதையைத் தீர்மானிக்க முடியும். ஏனென்றால், ஒருவேளை உங்கள் மூலதனம் உங்களுக்குப் பயனளிக்காமல் போய்விட்டால் உங்களுடைய குடும்பக் கடமை ஸ்தம்பித்துப் போய்விடக் கூடாது.

அதனால், உங்கள் வயது என்ன, உங்களுடைய சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் உங்களுடைய பணத்தை உழைக்க அனுப்பவேண்டும்.

நோஞ்சான் பிள்ளையைக் கொண்டுபோய் கல்லுடைக்க அனுப்பிவிட்டு, பிள்ளை வருமா என்று வழிபார்த்து நிற்பதைவிட, அவனை எளிமையான வேறு வேலைக்கு அனுப்புவதுதானே புத்திசாலித்தனம். என்ன கொஞ்சம் வருமானம் குறைவாகக் கிடைக்கும். பராவாயில்லை, பிள்ளை முக்கியமில்லையா!

சரி, உங்கள் வீட்டில் இருக்கும் உண்டியலை எல்லாம் உடைத்து காசுபணத்தைத் தேத்தி ரெடி பண்ணி வையுங்கள். எதில் முதலீடு செய்யலாம் என்பதைப் பற்றி நீள அகலமாக விவாதிக்கலாம்!

 
பிஸினஸ் தெனாலி

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்